Friday 8 April 2016

வாழை

வாழையைப்பற்றிய ஒரு கவிதையெழுதிட முற்பட்டபோது மனதினில் முந்தியடித்து முன்வந்த வரிகள்.......



இல்லறம் துவங்கும் திருமணம்
மரமாக முன்னின்று அலங்கரித்தாய்....
கனியாக பந்தியிலும்
இடம்பிடித்தாய்....
உணவும் கனியும் பரிமாற
இலையும்கூட
நீதந்தாய்...
மணமக்கள் அடையாளம்
கழுத்தினில் பூமாலை...
அங்கு நாராக
மலர் தொடுத்தாய்...
மந்திரங்கள் மறுத்து
மணம் புரிந்தாலும்
மாலையை மறுத்து மணம் புரிந்தவரில்லை...
வாழையடி வாழையாக வாழ்கவென வாழ்த்திலும் இடம்பிடித்தாய்...

வாழையில்லாத வாழ்க்கை
எவருக்கும் வாய்த்திட வாய்ப்பே இல்லை.....
- சக்திவேல் முருகன்...

Wednesday 27 January 2016

குடியரசு தினம்...சுதந்திர தினம்

இந்திய விழா....

இந்திய தேசமெங்கும்
ஆர்ப்பரிக்கும்
கொண்டாட்டம்....
ஏனிந்த கொண்டாட்டம்....

எத்தனையோ திருவிழாக்கள்
நாம் பிறந்த பொன்னாட்டில்...

தமிழனுக்கு
தைப்பொங்கல்...
தெலுங்கருக்கு
உகாதி....
மலையாளத் திருவோணம்.
மராட்டியாத்தில் ஹோலி...
வங்கத்தில் தசரா போல்
வண்ணவண்ண திருவிழாக்கள் நமது தேசத்தில் ஏராளம்...ஏராளம்...
இவை இங்கே இனங்களின் அடையாளம்....

இன்னும் சில திருவிழாக்கள்

இந்து...தீபாவளி
இசுலாம்...ரமலாம்
கிருத்துஜெயந்தி
சமணருக்கு மகாவீர ஜெயந்தி
மற்றும் ஒருவருக்கு புத்த பூர்ணிமா...

இவையெல்லாம்
மதங்களின் அடையாளம்..

இரண்டு விழாக்கள் இன்னும் மீதமுண்டு

ஆகத்து 15 சுதந்திர தினம்
சனவரி 26 குடியரசு தினம்..

இவை
மதங்களை மறக்கச்செய்யும்..

இனம் கடந்து
இந்திய தேசத்தை
நேசிக்கச்செய்யும்...

எனவேதான்
இவ்விரு விழாக்கள்...
இந்திய திருவிழாக்கள்...

இந்தியர் நாம்
ஒன்றிணைந்து வீழாது இருந்திடவே
இவ்விழாக்களுக்கு  விழா எடுத்தோம்....
எடுக்கின்றோம்...இனி வரும்நாளும்.......
குடியரசு தின வாழ்த்துகள்

....சு.சக்திவேல் முருகன்

Tuesday 1 December 2015


ஆகஸ்ட் 15


கோட்டை மாடமாளிகை

மாண்புமிகுக்கள் கொடியேற்றம்

வண்ண வண்ணச்சீருடை

அணிவகுப்பு மரியாதை

சிங்காரசிட்டுக்கள்

கண்கவர் நடனம்

மூவர்ணக்கொடி கர்வம் கொள்ளவில்லை
                           வானம் பார்க்கவில்லை........

அன்றைய தினம் சுதந்திரத்திற்கு ஆயுதபோலீஸ் பாதுகாப்பு............
                            




Sunday 29 November 2015

கலாம்....கலாம்





                 
                            கனவு நாயகன் எங்கள் கலாம்











பரந்த  தேசத்தில் சிறியு தீவாய் ஒரு கிராமம்

நீ பிறந்த காரணத்தால்  அது

 இந்தியாவின் சிறந்த கிராமம்……. இராமேஸ்வரம்   (பரந்த  தேசத்தில்…

 கால்வயிறு நிரம்பிய வேளையிலும்

கல்வி மேல் காதல் கொண்டாய்…

நேர்மையின் துணை கொண்டு

வறுமையை எதிர்கொண்டாய்…
                                                            


எண்ணத்தில் வலு கொண்டு

துனபத்திற்கு துன்பம் தந்தாய்….

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

உழைப்பின் உருவத்தை  பார்த்திருக்கலாம்.



கடைகோடி கிராமத்தில் பிறந்தாலும்

முதல்குடிமகனாக முடியும் என்று

முயற்சியின் வெற்றியை

உலகிற்கு உணர்த்தியோன் நீ…..

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

முயற்சியின் முழு உருவத்தை  பார்த்திருக்கலாம்.

அக்கினி ஏவி

ஆகாய சூரியனை நலம் விசாரித்தவன்

ஏழ்மையில் பிறந்து

 ஏவுகணை தயாரித்தவன்

அணுஆயுதம் சோதித்து

தேசத்தை முன்னிறுத்தியவன்

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

அறிவியலின் உருவத்தை  பார்த்திருக்கலாம்.



தமிழ்நாட்டிற்கு தண்ணீர்தான்

நாலாபுறமும் தகராறு…

தண்ணீரால் பிரிந்தவரும்

உனக்கு வடிக்கும் கண்ணீரால் இணைந்தாரே.

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

இனம் கடந்து நேசிக்கப்படும்

இந்தியனை  தரிசித்திருக்கலாம்.

மனிதர் வாழும் பூமியில்

மதங்கள் வேண்டுமானால்

வாழ்ந்துவிட்டுப்போகட்டும்.

மதவெறி மாய்ந்து போகட்டும்.

ஐந்துவேளை அல்லாவை தொழுதாலும்

ஏழுமலையான் சன்னதியில்

இந்திய தேசத்திற்காக

நெஞ்சுருகி வேண்டி நின்றாய்.

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

தேசப்பற்றின் உருவத்தை  பார்த்திருக்கலாம்.

பாரதி கண்ட அக்கினிக் குஞ்சுகளுக்கு

சிறகு முளைக்கச்செய்து

2020 ல் வல்லரசு தேசத்தை

வடிவமைக்க நினைத்தவனே

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இளைஞர்களின் எண்ணத்தில்

நீ விதைத்த விதைகள் எல்லாம்

விருட்சமாகி

வல்லரசு தேசத்தை நீயே கண்டிருக்கலாம்.



உலகையே உன் அன்பால்

 நீ வென்றிருக்கலாம்

எங்கள் கலாம் கலாம் கலாம்………





(21ம் நூற்றாண்டின் ஒரே நாயகனின் மறைவிற்கு
எண்ணத்தில் வடித்த கண்ணீர் கவிதை)
















Saturday 28 November 2015

அலைகள்

காற்றுக்காதலனோடு

சரசமாடி

கருத்தரித்த கடல் பெண்

அவசரமாய் பிரசவித்த

கணக்கற்ற குழந்தைகள்--------அலைகள்



தாய் தந்தை தகராறில்

முகவரி இழந்து

முகவரி தேடும் அபலைகள்------அலைகள்


தற்கொலை

புரிவதற்கு

ஏனோ
தரை தேடிவரும் கோழைகள் ------ அலைகள்

மழையின் கண்ணீர்

மழையின் கண்ணீர்


கதிரவனின் கனல் கொதிக்க
  உடல் பிரிந்த உயிராய்
  ஆவியாகப்பிரிகின்றேன்...

இடமிழந்து நிலம் பிரிந்து
நீராவியாய்ச் செல்கின்றேன்

மறுபிறப்பென்பது

மற்ற உயிர்க்கெல்லாம்

கற்பனையில் காண்பீர்கள்..

மழை- எனது மறுபிறப்பு என்பது

அறிவீரா மானிடரே....

வெண்மேகமாய் உலவுகின்ற
வேளையிலும்
தாய்ப்பசுவைத் தூரவைத்து
கட்டிவைத்த கன்றினைப்போல்
நிலம் சேரத் துடிக்கும்

எனது துடிப்பு உணர்வீரா மானிடரே.....


வான் முதல் நிலம் வரை
 
நான் பயணிக்கும் வேளை

அடைக்கும் தாழுடைத்து வரும்
 புண்கணீர் என்பது உணர்வீரா மானிடரே....

ஆவியாக நான் சென்று

நீராகத் திரும்பி வந்தவேளையிலே

நானிருந்த ஏரிகளைக் காணவில்லை..
குளங்களில் குடியிருப்புகள்...

ஏரி குளம் அழித்தீர்-இருப்பிடம் இழந்தேன்

மரங்களை வெட்டினீர்- மறுபிறப்பில் குறைந்தேன்.


இப்போது பெய்வது கனமழையல்ல.
 இருப்பிடம் இழந்து நான் வடிக்கும் கண்ணீர் மழை...

ஊடக நண்பர்களே......
 
தலைப்புச்செய்தி “குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது”

தயவுசெய்து செய்தி மாற்றுங்கள்

“இருப்பிடத்தை குடியிருப்புகளில் தேடியது மழைநீர்”

மானிடரே மன்றாடி வேண்டுகிறேன்
 
மற்றுமொரு மறுபிறப்பில் என் ஏரிகளை எனக்கே தாருங்கள்.....
கண்ணீர் மழையாகக் கேட்கின்றேன்....

கடல் எனக்கு பிடிக்கவில்லை...

ஊருக்குள் எனக்கும் ஒரு இடம் தாருங்கள்.....